ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சி.பி.ஐ-யின் முன்னாள் எஸ்.பி.யும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாகவும் செயல்பட்ட ரகோத்தமன் ராஜிவ் கொலை வழக்கில் இன்னமும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இருக்கிறது, என்று தொடர்ந்து கூறி வந்தார்.
மேலும், “ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்” என்ற தலைப்பில் புத்தகமும் எழுதியுள்ளார். ஊடகங்களில் நடைபெறும் சிபிஐ தொடர்பான விவாதங்களில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்து வந்த ரகோத்தமன், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரகோத்தமன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.







