புல்வாமா தாக்குதல் நினைவு தினம்; வீரர்களின் தியாகத்தை மறக்கமாட்டோம்- பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வீரர்களின் தியாகத்தை மறக்கமாட்டோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பயிற்சிகளை முடித்து விட்டு…

புல்வாமா தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வீரர்களின் தியாகத்தை மறக்கமாட்டோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பயிற்சிகளை முடித்து விட்டு முகாமிற்கு திரும்பிய மத்திய ரிசர்வ் படை போலீசாரின் வாகனங்கள் மீது, வெடிக்குண்டு நிரப்பட்ட காரை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில், சம்பவ இடத்திலேயே 40 பாதுகாப்பு படையினர் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது எனும் அமைப்பு நடத்தியது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுமழை பொழிந்து முற்றிலுமாக அழித்தது.

மேலும், 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அப்பகுதியை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதனை தொடர்ந்து புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வீரமரணமடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நாளில் புல்வாமாவில் நாம் இழந்த நமது வீரம் மிக்க வீரர்களை நினைவு கூர்வோம். வீரர்களின் உயிர் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். வீரர்களின் தைரியம் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.