புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததால், இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரைக்குப் பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. “நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்” என்ற திருக்குறளுடன் உரையை தொடங்கிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை விட தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, கடந்த ஆண்டு ரூ.10,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.9,709 கோடி என 94 சதவீதம் செலவிடப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தகவல் தெரிவித்தார், மேலும் புதுச்சேரி – கடலூருக்கு இடையே ரயில் போக்குவரத்து திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு திட்டப்பணிகள் தயார் செய்ய தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஆளுநர் உரையில் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
தொடர்ந்து 1 மணி நேரம் 10 நிமிடம் உரையாற்றிய துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது உரையை முடித்துக் கொண்டு பேரவையிலிருந்து ஆளுநர் மாளிகை புறப்பட்டார்.
துணைநிலை ஆளுநர் உரை முடிவடைந்த நிலையில் துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் வேறொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என கூறி பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், புதுச்சேரியின் முழுமையான பட்ஜெட்டை விரைவில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார். அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் கூடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைக்கும் என சபாநாயகர் செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் என தெரிவிக்கப்பட்டிருந்தும் ஆளுநர் உரைக்கு பிறகு பேரவை
காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏமாற்றத்தை
ஏற்படுத்தியது. பட்ஜெட்டிற்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் வழங்காததாலேயே
பேரவை ஒத்திவைக்கப்பட்டதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.