தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்
அமைப்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில்
புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2,127 ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உள்ளன. புதிதாக 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுவதால் அதன் எண்ணிக்கை 2,177 ஆக உயரும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 6 ஆண்டுகளாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படாமல் உள்ளன. எம்எல்ஏக்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தற்போது 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. 8 கிலோ மீட்டருக்கு ஒரு சுகாதார நிலையமும், 20 ஆயிரம் பேர் கொண்ட ஊர்களுக்கு ஒரு சுகாதார நிலையம் என்ற வழிகாட்டுதல் இருந்தது.
ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1.26 கோடி ரூபாய் செலவாகும். அதற்கு கட்டுமான ஊதியமாக 1.12 கோடி செலவாகும். முதல் கட்ட நிதியாக ஆரம்ப சுகாதார நிலைய பணி முடிக்க 120 கோடி செலவாகும். அதில் மாநில அரசின் நிதி பங்களிப்பு 40 சதவிகிதமாகவும், மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவிகிதமாகவும் உள்ளது. அரசாணை வெளியிட்டவுடன் கட்டுமான பணிகள் துவங்கும்.
வரும் அக்டோபர் 30ம் தேதி அந்தியூர் தொகுதியில் உள்ள பர்கூர் பகுதியில் வசிக்கும் மலைக்கிராம மக்களுக்கான சேவையை ஆய்வு செய்ய இருக்கிறேன். 2.3 கோடி பேருக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 93,60,434 பேர் முதல் முறை சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். 1 கோடியை இலக்காக வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 1 கோடியை இத்திட்டம் தொட உள்ள நிலையில், அந்த 1 கோடியாவது நபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்க இருக்கிறார்.
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 678 மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க
திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை விபத்தில் சிக்கிய 1,22,172 பேர் பயன்
பெற்றுள்ளனர். அதற்காக, ரூ.108.96 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ
கல்லூரி மருத்துவமனைகளில் தீபாவளி வெடி வெடிக்கும் போது ஏற்படும் தீ விபத்து,
தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க 5 முதல் 10 படுக்கைகள் வரை தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும். உயிரை பறிக்கக்கூடிய பட்டாசுகளையும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளையும் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள், ராக்கெட் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பெரும் அளவில் விபத்துகளை தவிர்க்க முடியும். அதிக அளவிலான ஒலி எழுப்பும் வெடிகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.