“புகைப்படம் எடுத்ததை தவிர வேறு எதுவுமே செய்யவில்லை” | பி.டி.உஷா மீது மல்யுத்த வீராங்கனை #VineshPhogat குற்றச்சாட்டு!

மருத்துவமனையில் இருந்த போது, ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தன்னுடைய அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி…

"PTUsha posted photo with me without my permission" - alleges wrestler #VineshPhogat

மருத்துவமனையில் இருந்த போது, ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தன்னுடைய அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தாய்நாடு திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹரியானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா அவரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். இதற்கிடையே, வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

முன்னதாக ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த போது கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டதால் வினேஷ் போகத் மயக்கம் அடைந்தார். இதையடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரை நலம் விசாரிக்க இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா சென்றார். தொடர்ந்து, வினேஷ் போகத்தும், பி.டி.உஷாவும் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்த நிலையில், பாரிசில் என்ன நடந்தது என்பது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு வினேஷ் போகத் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,

“மருத்துவமனையின் படுக்கையில் இருக்கும்போது வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாது. வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து செல்லும்போது, அந்த தருணத்தில் என்னுடன் நிற்பதாக எல்லோரிடமும் காட்டுவதற்காக என் அனுமதியின்றி புகைப்படத்தை எடுத்து பகிர்ந்துள்ளனர்.

உங்கள் ஆதரவை அவ்வாறு தெரிவித்திருக்க தேவையில்லை. இந்த சம்பவத்தால் உடைந்து போனேன். எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என்று தெரியவில்லை. பி.டி.உஷா என்னை மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னணி அரசியலில் நிறைய நடக்கிறது. என்னை மல்யுத்தத்தை விடவேண்டாம் என்று பலரும் கூறினர். நான் எதற்காக தொடர வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது.”

இவ்வாறு வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.