மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.டி.உஷா இன்று பதவியேற்றார்.
மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தர்மசாலா கோயில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இசைஞானி இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளையராஜா மற்றும் பி.டி.உஷா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூட்டம் தொடங்கியவுடன் பி.டி.உஷா பதவி ஏற்றார். பதவியேற்பின்போது பி.டி.உஷா தவறாக உச்சரித்த வார்த்தைகளை வெங்கைய நாயுடு சரிசெய்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் பதவியேற்பு குறித்து தகவல் வெளியாகவில்லை. நேற்று தில்லியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை பி.டி.உஷா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-ம.பவித்ரா








