36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோடநாடு வழக்கில் நடவடிக்கை கோரி ஆக.1 -ல் ஆர்ப்பாட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் இதனை தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும், அவர் நேசித்த வசிப்பிடமாகவும் இருந்து வந்தது கொடநாடு பண்ணை பங்களா.

அவரது மறைவிற்கு பிறகு 2017, ஏப்ரல் 24-ஆம் நாளன்று இரக்கமற்ற ஓர் அரக்கர் கூட்டம், அந்த கோடநாடு தோட்டத்திற்குள் புகுந்து அங்கே காவல் காத்து வந்த ஒம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்து, கிருஷ்ணபகதூர் என்னும் காவலாளியை கொடுங்காயப்படுத்தி, கொலை கொள்ளையை நிகழ்த்திய சம்பவம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்கிற இளைஞர், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரது மனைவி, மகள், மேலும் இந்தக் குற்றம் நிகழ்ந்த காலத்தில் கொடநாடு சரக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரது சந்தேக மரணங்கள், மர்ம விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று, மொத்தமாக 6 உயிர்கள் பறி போய்விட்ட நிலையில், இந்தக் கொடூரங்கள் நடைபெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை, இந்தக் குற்றத்திற்கான நோக்கம், இந்த பாவக் காரியத்தை பின் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டறிவதற்கும், அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கும் முறையான நடவடிக்கைகள் இதுவரை உறுதியோடு மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பல உயிர்கள் பறிபோன நிலையிலும், அந்தக் கொடூர நிகழ்வில் உயிரோடு தப்பித்து நேபாளத்திற்குச் சென்ற கிருஷ்ணபகதூர் என்கிற காவலாளியை இன்று வரை அழைத்து வந்து, அவர் கண்ணால் கண்ட அச்சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை ஏதும் காவல் துறையால் நடத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சட்டமன்றம் தொடங்கி, பொது வெளியிலும், குறிப்பாக 2021 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இச்சம்பவம் குறித்து பல சந்தேகங்களை மக்கள் முன் வைத்து பேசியவர் இன்றைய முதலமைச்சரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தான் என்பதையும், ஆட்சிக்கு வந்து 90 நாட்களுக்குள் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிப்போம் என்று மு.க. ஸ்டாலின் மக்களிடம் வழங்கிய வாக்குறுதியையும் நாடறியும்.

அப்படி பேசியது மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையிலும் இதனை பிரதான வாக்குறுதியாக தி.மு.க. அச்சிட்டு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ 21/2 வருடங்களை தொடும் நிலையில், இன்று வரை இந்த வழக்கின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை, உண்மைக் குற்றவாளிகளும், அதற்கு காரணமான கிரிமினல் பேர்வழிகளும் தண்டிக்கப்படவும் இல்லை என்பது அதிமுக தொண்டர்களிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் கடுமையான விமர்சனங்களையும், ஆட்சி நடத்தும் தி.மு.க.வின் மீதும் கடுமையான கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில், அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01-08-2023 அன்று காலை 10-30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading