நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்த வேண்டும் என மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. முன்னதாக இதில் பங்கேற்று பேசிய விழுப்புரம் தொகுதி விசிக எம்.பி ரவிக்குமார்,
“உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்குப் பிறகு அரசு பொறுப்புகளில் அமர்த்தப்படுவது மூலம் நீதித்துறையை அரசாங்கம் மறைமுகமாக கைகளில் வைத்துள்ளது” என்று கூறினார். மேலும்,
கொலிஜியம் முறை ஜனநாயகப்பூர்வமானதாக இல்லை என்றும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (National Judicial Appointments Commission) கொலிஜியத்திற்கு பதிலாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான திருமாவளவன்,
“நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்த வேண்டும். கொலிஜியம் முறை ஜனநாயகப்பூர்வமானதாக இல்லை; இதனை ரத்து செய்து விட்டு ஜனநாயகப்பூர்வமானதான முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர்,
“நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அநீதி இழைக்கப்படுகிறது; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜீ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதில் இது பிரதிபலிக்கப்பட்டுள்ளது.” என்றும் கூறினார்.
மேலும், தென் இந்திய பகுதியில் உச்சநீதிமன்ற கிளையை உருவாக்க வேண்டும் என்றும், நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.








