பண மோசடி வழக்கில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது புகார்

ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா.ராமமூர்த்தி.…

ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா.ராமமூர்த்தி. ராமமூர்த்தி, எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சுமார் 13 கோடி ரூபாய் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட சூழ்நிலையில், 2018ஆம் ஆண்டு கொடுங்கையூரை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது ராமமூர்த்தி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய 10 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கமலகண்ணன் அந்த தொகையை வாங்கி தருவதாக கூறி பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே சுரேஷை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆர்.கே.சுரேஷ் ராமமூர்த்தியிடம் கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்து ஒரு கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், ராமமூர்த்திக்கு 10 கோடி ரூபாய் கடன் கிடைக்கவில்லை. ராமமூர்த்தி இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி வீனா.ராமமூர்த்திக்கு ஆர்.கே.சுரேஷை அறிமுகம் செய்துவைத்த கமலகண்ணன் தங்களை போல் பலரை மோசடி செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக ஆர்.கே சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக வீனா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பல முறை காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறும் வீனா. நேரடியாக காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.