லகிம்பூர் வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாகினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பாஜகவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ராவும் சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படு கிறது. இதையடுத்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை, சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜரான ஆசிஷ் மிஸ்ரா, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பலியான 4 விவசாயிகளுக்கு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் திகோனியா கிராமத்தில் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி இல்லை என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார். இதனால் உபியில் மீண்டும் பெரிய அளவில் விவசாயிகள் கூடுவார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில்ம் இந்த இறுதி நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.








