நாமக்கல் சேர்ந்த கார்த்திக் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு தனியார் பேருந்து இயக்க உரிய அனுமதி பெற்று இயக்கி வருகிறேன். எனது பேருந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதியம் 3:24 மணிக்கு புறப்பட தமிழக அரசு போக்குவரத்து கழகம் நேரம் ஒதுக்கி உள்ளது. இதேபோல் எனக்கு அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பாளையம் என்ற ஊருக்கு செல்ல வேண்டிய தனியார் பேருந்து மதியம் 3:55 மணிக்கு புறப்பட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே 3:14 இயக்கப்படுவதால் எனக்கும், மற்ற அரசு பேருந்துகளுக்கும் 17 வருடமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் பேருந்துகள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த தனிநீதிபதி மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு, ஆவணங்களின்படி சரியாக உள்ளதால் தனியார் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்க வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கரூரைச் சேர்ந்த மற்றொரு பேருந்து உரிமையாளர் சுவாமி அப்பன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தனியார் பேருந்து இயக்கும் நேரத்தை முறைப்படுத்தாத திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கார்த்திகேயராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அண்மைச் செய்தி: “ஆளுநர் தொடர்ந்து தவறான கருத்தை தெரிவித்தால் தமிழகத்தில் நடமாட முடியாது” – முத்தரசன்
அப்போது நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் தனியார் பேருந்து நேரத்தை மாற்றி முன்னதாக இயக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பி மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி நடவடிக்கைகள் எடுக்காத திருச்சி மாவட்ட மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.







