கோவை ரயில் நிலையத்தில் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ கைதி தப்பியோட்டம்: பொதுமக்கள் உதவியை நாடிய காவல்துறை!

போலீசாரின் பிடியில் இருந்த கைதி தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை ரயில் நிலையத்தில் மேற்கு வங்க போலீசாரின் பிடியில் இருந்த ஒரு கைதி தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரைப் பிடிக்க பொதுமக்கள் உதவியை காவல்துறை நாடியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான ஆனந்தன், மேற்கு வங்க காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கிற்காக தேடப்பட்டு வந்தார். மேற்கு வங்க போலீசார் அவரை கண்காணித்து ரயிலில் கைது செய்து அழைத்து வந்தபோது, கோவை ரயில் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஆனந்தன் மேற்கு வங்க மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கேரளாவின் ஆலுவா ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் – சாலிமார் விரைவு ரயிலின் A1 பெட்டியில் ஜூலை 26 ஆம் தேதி இரவு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது ஜூலை 27 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தபோது, ரயில் நடைமேடையில் மெதுவாக நகரும் தருணத்தில் ஆனந்தன் ரயிலில் இருந்து குதித்து தப்பித்துள்ளார்.

அவருடன் பயணித்த மேற்கு வங்க போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால், ஆனந்தனை உடனடியாகப் பிடிக்க முடியவில்லை. தற்போது, அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தப்பி ஓடிய ஆனந்தன் தொடர்பான ஏதேனும் தகவல் பொதுமக்களுக்குத் தெரிய வந்தால், உடனடியாக 94981 80937 அல்லது 94982 73577 என்ற எண்களில் போத்தனூர் ரயில்வே காவல் நிலைய காவல் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கோவை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.