பிரதமரின் உரையில் எனக்கு திருப்தி இல்லை. அதானி தனது நண்பர் இல்லையென்றால் விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடியிருந்தார். மேலும் 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததாக கூறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்பட்டதாகவும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை தொடர்பாக ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் அளித்த பதிலில் திருப்தி இல்லை. அதானி குறித்த விவகாரத்தை பிரதமர் கண்டுகொள்ளவில்லை. மக்களவையில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை என்று கூறினார்.
பிரதமர் அதானியின் நண்பர் இல்லையென்றால், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்கு பிரதமர் உத்தரவிடலாமே? அதானி விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்? அதானியை பிரதமர் பாதுகாக்கிறார் என்பது தெளிவாகி தெரிகிறது. என ராகுல் காந்தி குற்றம்சாடினார்.







