பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார்.

Prime Minister Narendra Modi arrives in France - ecstatic welcome at the airport!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப். 10) அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நேற்று இரவு அவருக்கு விருந்து அளித்தார். பாரிஸில் இன்று நடைபெறும் 2-வது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் டிங் சூயெக்ஸியாங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கிகளை வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் புறப்படுகிறார். தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நாளை மறுநாள் சந்திக்க உள்ளார். வர்த்தக பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது. அமெரிக்காவின் மின்னணு பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ரசாயனங்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.