தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் பிரதமர் மோடி நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
கர்நாடகத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் பிரதமர் மோடி, பெங்களூருவில் கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனகதாசர் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு நாளை மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து அங்கிருந்து பெங்களூரு வழியாக சென்னை-மைசூரு இடையே இயக்கப்படவுள்ள தென்னகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை அவர் கொடியசைத்து தொடங்கவுள்ளார். பின்னர், ரூ.5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட பெங்களூரு கெம்போகௌடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தையும், பெங்களூருவில் கெம்பே கௌடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
பின்னர் வெள்ளிகிழமை பிற்பகலில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தில் நடைபெறும் 36வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
2வது நாளான சனிக்கிழமை ஆந்திரா செல்லும் பிரதமர் மோடி, விசாகப்பட்டினத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் இடையே ரூ.3,750 கோடியில் அமைக்கப்படும் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்து தெலுங்கானாவுக்கு செல்லும் பிரதமர், ராமகுண்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட யூரியா உரத்தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.







