தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மத்திய கிழக்கு நாடுகளின் போரால் முன்னேறிய நாடுகளே 30% வரை பெட்ரோல் விலையை உயர்த்திய நிலையில், நமது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, தற்போது அவற்றின் மீதான கலால் வரியையும் குறைத்து விலை உயர்வைத் தடுத்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது.
டீசல் மீதான கலால் வரியை மொத்தமாக நீக்கியதோடு, ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்திருக்கும் இந்த சீரிய நடவடிக்கையால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு சரி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விலை உயரும் அபாயத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வரி குறைப்பினால் அரசுக்கு வருவாய் இழப்பு நேரிடும் ஆபத்திருந்தும், பாரத மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி, மக்களை விலை உயர்விலிருந்து காக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைமைக்கான எடுத்துக்காட்டு என்பதில் எந்த சந்தேகமுமில்லை”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







