“கூட்டணிக்காக இபிஎஸ்-ஐ பிரதமர் மோடி மிரட்டினார்” – எஸ்.பி.சண்முகநாதன் பரபரப்பு புகார்!

பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி மிரட்டினார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினத்தில்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும்
அதிமுக கழக அமைப்பு கழக செயலாளர் , ஏ.கே.சீனிவாசன் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், தமிழ்நாட்டில் எந்தக்கட்சி வந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக-விற்குதான் போட்டி இருக்கும் என்றார். மேலும் அதிமுக, திமுக என்ற இரண்டு அணிகள்தான் தேர்தலில் இருக்கும் என்றும் மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும் எனக்கூறிய அவர், எந்த கட்சியானாலும் இந்த இரண்டு திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணிக்கு வருவார்கள் என்றார்.

அதிமுக மீது யார் எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் அதில் வெற்றி பெற்று,
கட்சியை எடப்பாடி பழனிசாமி திறம்பட நடத்திக்கொண்டிருப்பதாகவும் பேசிய அவர், அதிமுகவின் தலைமை எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வேறு ஒருவரிடம்
சென்றிருந்தாலும் கட்சியை திமுகவிடம் அடகு வைத்துவிட்டு சென்றிருப்பார்கள்
என ஓபிஎஸ் குறித்து விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் கொடநாடு கொலை வழக்கு மற்றும் பல்வேறு
ஊழல் வழக்குகளில் சேர்த்து சிறையில் அடைத்துவிடுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி மிரட்டியதாக குற்றம் சாட்டினார். சிறுபான்மையினரின் நலனுக்காக பாஜக கூட்டணியை அதிமுக புறக்கணித்ததாகவும் தெரிவித்தார். இன்று திமுக பாஜவுடன் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியை காப்பாற்றி வருவதாகவும் விமர்சனம் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.