பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ம் தேதி போர் வெற்றி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று 50வது வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து போர் நினைவுச் சின்னத்தில் உள்ள தீபச்சுடர்களை அவர் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு முப்படைகளின் வீரர்களும் மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, தேசிய போர் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். அதில், நாட்டு மக்களின் சார்பாக 1971ஆம் ஆண்டு போரில் பங்கேற்ற வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈடு இணையற்ற வெற்றியைப் பெற்றுத் தந்த துணிச்சல் மிக்க வீரர்களை எண்ணி நாட்டு மக்கள் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.