நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கும் குடியரசுத் தலைவர் உரையை ஆம் ஆத்மி மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி குடியரசு தலைவர் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கை 2022-23 முழு நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும், நிதி வளர்ச்சி, பண மேலாண்மை மற்றும் வெளித்துறைகள் உள்ளிட்ட எதிர்கால கண்ணோட்டத்தையும் மதிப்பாய்வு செய்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இந்த பொருளாதார ஆய்வறிக்கை, முக்கிய கொள்கை முடிவுகளுக்கு முன்னோடியாக அமைவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் விரிவான புள்ளிவிவர தரவு மூலம் முந்தைய முடிவுகளின் தாக்கத்தையும் மதிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. நாளை காலை 11 மணிக்கு மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பின்னர் மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் வைக்கப்படுகிறது. இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைய உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களை கவரும் வகையில் இந்த பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இரு சபைகளிலும் நடக்கிற விவாதத்தின் முடிவில், பிரதமர் மோடி பதில் அளித்து பேசுவார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ம் தேதி முடிவுக்கு வருகிறது. 2வது அமர்வு, மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும். இந்தக் கூட்டத்தொடரில் பி.பி.சி. ஆவணப்பட விவகாரம், சீன எல்லையில் நிலவும் பதற்றம், தொழில் அதிபர் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பிஆர்எஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கேசவ ராவ் இது குறித்து பத்திரிக்கைகளிடம் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி அரசின் நிர்வாக் சீர்கேடுகளை கண்டித்து குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல ஆம் ஆத்மி கட்சியும் தங்களோடு இணைந்து குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்பதாகவும் கேசவ் ராவ் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் சிங் மத்திய பாஜக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
– யாழன்