மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை, குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சை ரயில் நிலையத்தில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டில் 5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறினார்.

மேலும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை, குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு உடனடியாக தனது செயல்பாட்டை மாற்றி, அரசியல் ரீதியான அழுத்தத்தை குடியரசுத் தலைவர் மூலமாக பிரதமருக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.







