கோயில் நிலங்களை பாதுகாப்பதிலும், மீட்பதிலும் இந்து சமய அறநிலையத்துறை அஜாக்கிரதையாக செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் அளவீடுகளும், இந்து அறநிலையத் துறை அளித்த நில அளவீடுகளும் மாறுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, கோயிலுக்கு சொந்தமான நிலம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், மீட்கப்பட்ட நிலம் ஆகியவற்றின் அளவு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கோயில் நிலங்களை பாதுகாப்பதிலும், ஆக்கிரமிப்புகளை மீட்கும் நடவடிக்கைகளிலும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்தனர். கோயில்களின் ஆக்கிரமிப்புகளை மீட்க உரிய வழிமுறைகளை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.