தமிழ்நாடு, புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்ட குடியரசுத் தலைவரை, விமான நிலையத்தில் ஆளுநர், முதலமைச்சர் வழியனுப்பி வைத்தார்.
முதுமலை தெப்பக்காடு யானைகள் காப்பகம் மற்றும் சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பின்னர் புதுச்சேரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை அவர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வில்லியனூர் பகுதியில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனையை காணொலி மூலமாக திறந்து வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இன்று ஆரோவில்லில் நடைபெற்ற அரவிந்தர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் பின்னர், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் குடியரசு தலைவருக்கு புத்தகம், சால்வை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.




