கொரோனா தொற்று, போர் உள்ளிட்ட காரணங்களால் 2030-ம் ஆண்டுக்குள் வறுமையை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பு இல்லை என உலக வங்கி அதிர்ச்சியளித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக வரலாற்று திருப்பு முனை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு 71 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாழ்வதாக தெரிவித்துள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் போர், சீனாவில் குறைந்த வளர்ச்சி மற்றும் உணவு, எரிசக்தி விலை உள்ளிட்டவை வறுமை குறைக்க முடியாது என்பதற்கு உதாரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலக மக்கள் தொகையில் சுமார் 7 சதவீதம் பேர் 2030-ம் ஆண்டில் பெரும்பாலும் அதே வருமான மட்டத்தில் தான் வாழ்வார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இது மோசமான கண்ணோட்டத்தை காட்டுவதாக தெரிகிறது. பணவீக்கம், நாணயத் தேய்மானம் உள்ளிட்டவை தீவிர வறுமையின் அதிகரிப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை போக்க அல்லது மாற்ற அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீண்ட கால வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஏழை மக்களைப் பாதிக்காமல் வருவாயை உயர்த்த உதவும் சொத்து வரி மற்றும் கார்பன் வரி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் தீவிர வறுமை தன்மை இருப்பதாகவும், இது சுமார் 35% வறுமை விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. தீவிர வறுமையில் உள்ள அனைத்து மக்களில் இவை 60% ஆக உள்ளது என குறிப்பிட்டுள்ள உலக வங்கி, 2030-ம் ஆண்டுக்குள் வறுமையை முடிவுக்கு கொண்டுவரும் இலக்கை கண்டிப்பாக நிறைவேற்ற முடியாது என விளக்கமளித்துள்ளது.
-இரா.நம்பிராஜன்