தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் ஏராளமான பானை ஓடுகளும், எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் தான் முதன்
முதலில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் இதுவரை தமிழக அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறை சார்பில் என 8 முறை அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்துள்ளது.
அதனை தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் முதன் முதலில் அகழாய்வு பணிகள் மேற்கொண்ட வெளிநாட்டு ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா என்பவர் ஆதிச்சநல்லூர் உட்பட 37 இடங்களில் தொல்லியல் இடங்கள் என்று குறிப்பிட்டுச் சென்றார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல இடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆதிச்சநல்லூர்
தாமிரபரணி ஆற்றின் மறுகரையில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு திரடு பகுதி தோண்டப்பட்டது. அந்த திரட்டில் பானை ஓடுகள், புழங்கு பொருட்கள், மண் விளக்குகள், பானைகள் என ஏராளமான பழங்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்து உள்ளது. மேலும் அதன் அருகே ஏராளமான எலும்புகளும் காணப்படுகிறது.
ஏற்கனவே அலெக்சாண்டர் ரியா கூறிய 37 இடங்களில் கொங்கராயகுறிச்சி பகுதியும்
ஒன்றாகும். எனவே ஆதிச்சநல்லூரில் பழங்கால மக்கள் வாழ்ந்த இடம்
கொங்கராயகுறிச்சியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே கொங்கராயகுறிச்சியில் ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என தொல்லியல் ஆர்வலர் கூறி வருகின்றனர்.







