பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார். முதல் பாகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தமிழின் முன்னணி நடிகர்களான விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசைமைத்துள்ள இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என படகுழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவியாக த்ரிஷா நடித்துள்ளனர்.
சோழர்களின் பூமியான தஞ்சாவூரில் ஜீலை மாதம் முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் சில காரணங்களால் டீசர் வெளியீட்டு விழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் வருகிறான் சோழன் என்ற புதிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான லைகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
– தினேஷ் உதய்







