பொன்னேரி ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவேங்கடபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவிக்கும் மாலை மாற்றி, பூப்பந்து எறிதல் நிகழ்வுடன் பட்டாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடைபெற வேண்டி கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். சீனிவாச பெருமாள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் மாங்கல்ய கயிறு, குங்குமம், அன்னதானம் வழங்கப்பட்டது.








