சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

நாகை அடுத்த பனங்குடியில் சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடந்து வந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகள்…

நாகை அடுத்த பனங்குடியில் சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடந்து
வந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்கான நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய பகுதிகளிலிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில், கையகப்படுத்திய நிலத்துக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்காமல், சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிலம் அளவிடும் பணிகள் தொடங்கி, எல்லை கற்கள் பதிக்கப்பட்டது.  இதனையடுத்து கற்கள் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியும், பதிக்கப்பட்ட கற்களை பிடுங்கி எறிந்தும் நரிமணம், பனங்குடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இவர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் டிஎஸ்பி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இந்த பேச்சுவார்த்தையில், வருகிற ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான மறுவாழ்வு மற்றும் மறுகுடி அமர்த்துதல் தொடர்பான பணிகள் முடிக்கப்படும் எனவும் இதுவரை போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் படிப்படியாக நீக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர்
அறிவித்தனர்.  பிள்ளை பனங்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச் சாறு
வழங்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது.  அதன்படி 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.