கேரளாவில் ஜன.14ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்க வேண்டுமென அம்மாநில முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையையடுத்து ஜன.14 அரசு விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள், ஆண்டு தோறும் ஜன.14ம் தேதி பொங்கல் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பாரம்பரிய உடையணிந்து, உறவினர்களுடன் பொங்கலிட்டு கொண்டாடுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்பண்டிகையை கொண்டாட தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் வருடம் தோறும் ஜன.14ம் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். இந்நிலையில் நடப்பாண்டில் ஜன.15ம் தேதி விடுமுறை நாளாக கேரள அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அன்று விடுப்பு அளிக்காமல் அதற்கு மறுநாள் விடுமுறை அறிவித்திருப்பது அம்மாநில வாழ் தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாநில முதலமைச்சர் பினறாயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், “தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.
கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன்.
ஜனவரி 14 ஆம் தேதி புனிதமான ” தை ” தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளன்று 6 மாவட்டங்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஜன.14 அரசு விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது