தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு போனஸ் வழங்கப்படவுள்ளது. தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து, சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும், முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு போனஸ் வழங்கப்படவுள்ளது.
மேலும் “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படவுள்ளது.
இந்த போனஸ் மற்றும் பொங்கல் பரிசுகள் வழங்குவதன் மூலம் தமிழக அரசிற்கு 221 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று நிதித்துறை தெரிவித்துள்ளது.







