பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதியளித்துள்ளார்.
பொள்ளாச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கே. சுகுமார் மற்றும் வால்பாறை தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகராஜ் ஆகியோரை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“அமைதியான நகரான பொள்ளாச்சியின் பெயரை கேட்கும் பொழுது அனைவரும் வருத்தப்படும் அளவிற்கு பெண்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் அவமானம் ஏற்படும் அளவிற்கு அநீதி இழைக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆளும் கட்சியினர் இருக்கின்றனர். மரியாதைக்கும் அன்புக்கும் பெயர்போன கொங்கு மண்டலத்தில் இப்படி எல்லாம் நடக்கிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுப்பது அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் பணியாக இருக்கும். திமுகவினர் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாகவும், ஆளுங்கட்சியினர் 1500 ரூபாய் தருவதாகவும் கூறி மக்களை ஏலம் எடுக்கின்றனர். இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம் இவர்கள் கூறியுள்ள இலவசங்கள் எல்லாம் அளிப்பதற்கு வருடத்திற்கு 50,000 கோடி ரூபாய் வேண்டும் அவ்வளவு பணத்துக்கு அவர்கள் எங்கே செல்வார்கள்.” என்று கூறியுள்ளார்.
தொடரந்து, “தான் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று அறிந்து முதல்வர் இவ்வளவு இலவசங்களை அறிவிக்கிறார். அடுத்து ஆட்சிக்கு வருவார்கள் மாட்டிக்கொள்ளட்டும் என்று அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாமல் திமுகவினர் தவித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி கஜானாவை தூர்வாரிவிட்டார். திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் கஜானாவில் ஒன்றுமில்லை என்பதால் பொது மக்களின் உடமைகள்தான் பறிபோகும். தீய சக்திகளையும் தமிழின துரோகிகளையும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை. இருவரும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கூறியுள்ளார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றக் கூடியதாக உள்ளது. தமிழகத்தில் தொழில் புரட்சியை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.” என்று தினகரன் தனது பரப்புரையில் கூறியுள்ளார்.