பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விரைவில் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு தயக்கம் காட்டுவதாக தெரிவித்தார்.
மேலும், பிற மாவட்டங்களை விடவும் அதிகளவு மக்கள் தொகை கொண்ட பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விரைவில் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.







