சிவகாசி புறநகர் பகுதிகளில் மைதானங்களில் விளையாடிய இளைஞர்கள், சிறுவர்கள், போலீசாரின் ட்ரோன் கேமராவை கண்டதும் சிதறி ஓடி மறைந்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதைதடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இளைஞர்கள், சிறுவர்கள் வீட்டிற்குள் இருக்காமல் தெருக்களில் சுற்றியும், கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடியும் வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார், புறநகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமலும், அத்தியாவசியத் தேவை இல்லாமலும் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். சாலைகளில் திரிபவர்களை விட, மைதானங்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து கபடி, கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
இதனை தடுப்பதற்காக போலீசார், ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், சிவகாசியின் புறநகர் பகுதிகளான நாரணாபுரம் புதூர், இந்திரா நகர், போஸ் காலனி, அம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ட்ரோன் கேமிரா மூலம், போலீசார் கண்காணித்தனர். இதனையறிந்த அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களும், சிறுவர்களும் அங்கிருந்து ஓடி ஒளிந்தனர்.







