சென்னையில், வாகன சோதனையின் போது, போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சேத்துப்பட்டு ஸ்பர்டேங்க் சாலை சந்திப்பில் போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இ-பதிவு இல்லாமல் அந்த வழியாக கார் ஒன்றை மறித்து போலீசார் விசாரித்தனர். அதில் வந்த பிரீதி என்ற பெண்ணுக்கு போலீசார் ரூ 500 அபராதம் விதித்தனர். அதை தரமறுத்த அந்த பெண், தனது தாயாருக்கு போன் செய்தார்.
இதையடுட்து அங்கு வந்த அந்த பெண்ணின் தாயார் தனுஜா, வாகன சோதனையில் இருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரை அவர் தரக்குறைவாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகளை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
இந்த வீடியோ வெளியாகி பரபர்ப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போக்குவரத்து காவலர் ரஞ்சித்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் தனுஜா மற்றும் பிரீதி ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருகின்றனர்.







