கூட்டணியில் இருந்து விலகியதால் பாமகவுக்குதான் இழப்பு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அண்ணா உருவப் படத்திற்கு அதிமுக சார்பில் அதன் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பாமக தனித்துப் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். கூட்டணியில் இருந்து விலகியதால் பாமகவிற்கு தான் இழப்பு எனவும், அதிமுகவுக்கு எந்த இழப்புமில்லை என்றும் கூறினார். எங்களது ஓட்டு வங்கியில் எந்த வித பாதிப்பும் இல்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையே திமுக கூறியுள்ளது, உள்ளாட்சித் தேர்தலில் அதன் தாக்கம் இருக்கும். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.







