9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதனையடுத்து, தேர்தல் பணிக்குழு அமைப்பது உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது. முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் களம் காணும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுவுக்கு விண்ணப்பிக்கவும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் இன்று முதலே மனு தாக்கல் செய்யவுள்ளனர். வரும் 22ஆம் தேதி வரை தினமும் 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 25-ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற இறுதி நாளாகும்.







