ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சு! #Ukrainian பயணம் குறித்து ஆலோசனை!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சமீபத்திய உக்ரைன் பயணம் குறித்தும், அங்கு பேசியது குறித்தும் விளக்கினார். அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சமீபத்திய உக்ரைன் பயணம் குறித்தும், அங்கு பேசியது குறித்தும் விளக்கினார்.

அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்ய தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கு முக்கிய பங்காற்ற இந்தியா தயாராக உள்ளது என மோடி கூறினார்.

இது தொடர்பாக, பிரதமர் மோடியை தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரை பாராட்டினார். இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கது எனவும் கூறினார்.

இந்நிலையில், இன்று (ஆக., 27) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தொடர்பு கொண்டு தனது ரஷ்ய பயணம் தொடர்பாக விளக்கம் அளித்தார் பிரதமர் மோடி.

இது தொடர்பாக பிரதமர் மோடி ‛எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

ரஷ்ய அதிபர் புடினுடன் பேசினேன். இருநாடுகளுக்கு இடையிலான வலுவான கூட்டாண்மை மற்றும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். ரஷ்யா – உக்ரைன் போர் பற்றிய எனது எண்ணம் மற்றும் சமீபத்திய எனது உக்ரைன் பயணம் குறித்து கலந்துரையாடினோம். போரை கைவிட்டு, அமைதியான தீர்வுக்கு ஆதரவு அளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.