தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை வரும் 12-ம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்க கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து, வரும் 12ம் தேதி விருதுநகரில் நடைபெறும் திறப்பு விழா நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக விழா ரத்தானது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.







