தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம், குழுவின் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடல் அரிப்பை தடுக்க பனைமரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அண்மையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா, இன்ஃபோசிஸ் நிறுவநர் மற்றும் தலைவர் நந்தன் எம். நிலேகனி, ஐ.நா. முன்னாள் துணைப்பொதுச் செயலர் எரிக் எஸ். சோல்ஹிம், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா உள்ளிட்டோர் சிறப்பு உறுப்பினர்களாக உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் செயல்திட்டங்கள், வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக முதலமைச்சர் தலைமையில் இக்குழு 2022 அக்டோபரில் அமைக்கப்பட்டது. காற்று மாசுபாட்டை குறைப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, விலங்குகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவது. சுற்றுசூழலை மேம்படுத்துவது. காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது, அதேபோல தொழிற்சாலைகளில் இருந்து வரக்கூடிய கழிவுகள் மற்றும் மாசுகளை தடுப்பது, போன்றவை குறித்து இந்த குழு ஆலோசித்து வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன், துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ். ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார் . அப்போது இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் இந்த அரசு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த விரைவாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்கான காலநிலை திட்டத்தை அறிவித்து நிதிநிலை அறிக்கையில் அதற்கு என 500 கோடி ரூபாயை ஒதுக்கி இந்தியாவிற்கே முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 33 விழுக்காடாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் பதியம் போடப்பட்டி நடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. சர்வதேச வானிலை மாதிரிகளால் இந்த பகுதிக்கு என கணிப்பது மிகவும் கடினம். தமிழ்நாட்டிற்கான தனித்துவமான மாதிரிகளை உருவாக்கவும் உபகரணங்களை வைக்கவும் 10 கோடி ரூபாயை அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்து திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
கார்பன் சமநிலை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றால் அதனை அடைய வேண்டும். Climate resident villages மாற்றும் திட்டம் இன்று தொடங்குகிறது. காலநிலை அறிவு இயக்கத்தை செயல்படுத்த போகிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.பனை மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
கடற்பசு, தேவாங்கு உள்ளிட்ட முதல் முறை உயிரினங்களை பாதுகாக்க சரணாலயம் அமைத்துள்ளோம். மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டில் இருந்து பைகளை எடுத்துச் செல்லும் குறியீடாக மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எப்போதும் கார்பன் சமன்நிலை அடைய வேண்டும் என்பதை இந்த குழு தான் முடிவு செய்யப்போகிறது.வளர்ச்சி ஒரு கண் என்றால் காலநிலை மாற்றம் மற்றும் சிந்தனை இன்னொரு கண். இந்த இரு கண்களும் மாநிலத்திற்கு தேவை.தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்தே செயல்படுத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை கையாள்வது போல, புதிய புதிய வெப்ப அலைகளையும் நோய்களையும் கையாள தயாராக வேண்டும். 2070-ம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழ்நாடு கார்பன் நிலை அடைய ஆலோசனையை இந்த குழு வழங்கும். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா