நாகை அருகே பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலிய கழகத்தின் சுத்திகரிப்பு
நிலையம் அமைந்துள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கப்பல்களுக்கு எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் கப்பலில் வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைத்திற்கு எடுத்து செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள் : 11 ஆண்டுகள் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய வழக்கறிஞர் – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில், பட்டிச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள சென்னை பெட்ரோலியத்திற்கு
சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் நேற்று இரவு கடலில்
கலந்துள்ளது. கச்சா எண்ணெய்யில் இருந்து வெளியேறும் வாயு, கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்துவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய், சாமந்தான்பேட்டை மீனவ கிராமம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களின் கடல் பகுதி வரை பரவியுள்ளது. இதனால் கடல் நீர் மாசடைந்து மீன்கள் மற்றும் நண்டுகள் உயிரிழந்து வருகின்றன.
குழாய் உடைப்பு குறித்து தகவலறிந்த சென்னை பெட்ரோலியக் கழக அதிகாரிகள், ஓ.என்.ஜி சி அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு வருகின்றனர். அதேபோல் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மீனவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பெட்ரோலிய கழகம் இந்த குழாயை அமைத்தபோது, பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், குழாய் உடைப்பால் பாதிப்பு ஏற்பட்டு வருவதையடுத்து கிராமத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. மேலும் சம்பந்தப்பட்ட மீனவ கிராம மக்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக இங்கு உள்ள குழாயினை அகற்றி விட வேண்டும் எனவும், அதுவரை தங்களது வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சார்லி கப்பல் 435, 436 ஆகிய இரண்டு கப்பல்கள் மற்றும் டோனியர் விமானம் மூலம் கடலில் எந்த அளவு எண்ணெய் படர்ந்துள்ளது என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை எவ்வாறு தடுப்பது என்றும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, சென்னை பெட்ரோலிய கழகத்தின் குழாய் இப்பகுதியில் இருக்கக் கூடாது, அதை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
– ஜெனி








