புதுச்சேரியில் நிலுவை ஊதியம் கோரி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்

புதுச்சேரியில் இயங்கி வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்கள், 30 மாத நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரியில் கடந்த 50…

புதுச்சேரியில் இயங்கி வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபியில் பணியாற்றும்
ஊழியர்கள், 30 மாத நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கூட்டுறவு
நிறுவனமான அமுதசுரபி சூப்பர் மார்க்கெட்டாக மாற்றம் செய்யப்பட்டது. இங்கு
சந்தை விலையை விட மிகக்குறைவான விலையில் மளிகை, ஜவுளி மற்றும் மின்சார
சாதனங்கள் ஆகிய பொருட்களைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையிலும், அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துகொள்ளும் வகையில் மாதக்
கடனிலும் பொருட்களை விற்பனை செய்து லாபத்தோடு சிறந்த முறையில் செயல்பட்டு
வந்தது.

ஆட்சியாளர்களின் தொடர் குறுக்கீட்டால் அமுதசுரபி நிறுவனத்தில் தேவைக்கு
அதிகமாகப் பணியாட்களை நியமித்தது. தனியார் கட்டிடங்களில் மாத வாடகைக்கு தேவையற்ற இடங்களில் கடைகளை திறந்து செயல்படுத்தியது போன்ற காரணங்களால் இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்றாண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

மேலும், அங்கு பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கே கடந்த 30 மாதங்களாக
ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, எந்தவிதப் பொருட்களும் இன்றி தற்போது வரை பெயரளவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமுதசுரபியில் பணியாற்றும்
ஊழியர்களின் 30 மாத நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரியும், அமுதசுரபி
முழுமையாக இயங்காததால் மாற்றுப் பணி வழங்கிட வலியுறுத்தினர்.மேலும் அமுதசுரபி
கட்டிடத்தின் மூன்றாம் மாடி கட்டிடத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏறி நின்று
தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். புதுச்சேரியில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த ஊழியர்களின்
கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.