பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை
குறித்த காலத்துக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென குடும்பநல
நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரி
கடந்த 2014ம் ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனு நிலுவையில் உள்ள நிலையில் தாய் – தந்தைக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் 20
ஆயிரம் ரூபாய் வழங்கும்படி 2018ம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மகன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி
வேல்முருகன், பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரும் வழக்குகளை குறிபிட்ட
காலத்திற்குள் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும்
உத்தரவிட்டுள்ள நிலையில் 2014ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதற்கு
அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும்
மனுக்களை குறித்த காலத்துக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இடைக்கால உத்தரவை எதிர்த்து
சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி, மகனின் மனுவை தள்ளுபடி செய்து
உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கை மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென சென்னை
குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, மேலும் கால அவகாசம்
நீட்டிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.







