ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு மீதான விசாரணை ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி வழக்கறிஞர் விஷ்ணு சங்கரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு வழக்கமான பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், சிவலிங்கத்தை கார்பன் பரிசோதனை முறையில் அதன் பழமையை கண்டறியும் முறைக்கு உட்படுத்த இந்திய அகழாய்வுத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அவர் இன்று கோரிக்கை வைத்தார்.
ஏற்கனவே ஞானவாபி மசூதியை ஆய்வு செய்வதற்காக ஆணையம் அமைத்த வாரணாசி கீழமை நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அமைப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வில் வரும் ஜூலை இருபத்தி ஒன்றாம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் அன்றைய தினமே இந்த வழக்கும் அதனோடு சேர்த்து விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.
-ம.பவித்ரா








