தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு, காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி, தமிழ்நாட்டின் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் பேரணி நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். பேரணி நடத்தவும் அனுமதி வழங்கினர்.
இதையும் படியுங்கள் : இந்திய பொருளாதார பின்னடைவு குறித்த மேற்கத்திய கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு!
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது, இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதிகள் அஜய் ரஸ்தோஹி, பீலா திரிவேதி அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து ஆணை பிறப்பித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.








