கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி; கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்த தமிழ்நாடு அரசின் அரசாணை, இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத…

கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்த தமிழ்நாடு அரசின் அரசாணை, இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்துது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடரும் நிலையில், இத்திருக்கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றயதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து, நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் என நேற்று அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்தது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்த தமிழ்நாடு அரசின் அரசாணை, இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது எனவும், ஆரம்பத்தில் வி.ஐ.பி தரிசனம் மட்டுமே கனகசபை மீது அனுமதிக்கப்பட்டது. பின் பொதுமக்கள் அனைவரும் வழிபட்ட நிலையில், யாருக்கும் அனுமதி இல்லை என்ற முடிவை தீட்சிதர்கள் எடுத்தனர். இதற்கு எதிராக போராட்டங்களும் எழுந்தன.

அண்மைச் செய்தி: ‘மாநிலங்களவை தேர்தல்; தென் மாவட்டங்களில், நன்கு படித்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் – அதிமுக ஆலோசனை’

இவ்விசயத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து, கனகசபை மீது ஏறி அனைவரும் வழிபடலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தீட்சிதர்கள் இப்போதும் இந்த முடிவுக்கு ஒத்துழைக்கவில்லை. எதெற்கெடுத்தாலும் அவர்கள் இவ்வாறு முரண்டு பிடிக்கும் நிலை சரியானதல்ல.

இருப்பினும், உறுதியாக இருந்த அரசாங்கம், உத்தரவை உடனடியாக அமல் படுத்தி, மக்கள் வழிபடுவதை உறுதி செய்துள்ள நடவடிக்கையை சி.பி.ஐ(எம்) சார்பில் பாராட்டி வரவேற்பதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.