வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. சமூக நீதி பற்றி பேச அரசுக்கும், திருமாவளவனுக்கும் எந்த உரிமையும், அருகதையும் கிடையாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கடவுகள் கலக்கப்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமக்களை சந்தித்து நடந்தது குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகள் குறித்தும், மனித கழிவுகள் கலந்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், குடிக்கின்ற நீரில் மனித
கழிவுகளை கலந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல். இந்த செயல் கண்டிக்கத்தக்கது. சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி மாற்றி உள்ளது ஏமாற்று வேலை. குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கும் அரசு கையாலாகாத தனத்தையே இது காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு சமூக நீதி குறித்து பேசுவதற்கு திருமாவளனுக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை கண்டித்து திருமாவளவன் போராட வேண்டும். வாக்கிற்காக திமுக செயல்பட்டு வருகிறது.
குற்றவாளிகளை அடையாளம் காட்டினால் அந்த சமூகத்தின் வாக்கு கிடைக்காது என்பதால் தான் தமிழக அரசு திசை திருப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது பெரியார் மண், அண்ணா மண் என்று கூறுவதற்கும், சமூக நீதி குறித்து பேசுவதற்கும் தமிழக அரசுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று கூறினார்.







