ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991, மே 21ம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்பதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தொடர்ந்து சட்டரீதியாக போராட்டத்தை நடத்திவருகிறார்.
2016ம் ஆண்டு, பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவானது உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணையிலிருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்றும் இதுதொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சிபிஐ மற்றும் பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்தும் விசாரணை முடியாத நிலையில், தான் அவரது விடுதலை தொடர்பாக முடிவெடுக்க முடியாது என்று ஆளுநர் கூறியிருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்று இரட்டை நிலைப்பாட்டை ஆளுநர் எடுத்திருந்தார் என்று கூறிய அற்புதம்மாள், இதனால் ஆளுநர் கடிதத்தின் நகலை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்று வரும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க முடியும் என்றும் வேரொரு வழக்கை மேற்கோள் காட்டி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையில் விசாரிக்கப்பட உள்ளது.




