அரிக்கொம்பன் யானையை அகத்தியமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முண்டந்துறை வனப்பகுதிக்குள் வசிக்கும் காணி இன மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் 20 பேரை கொன்றதாக கூறப்படும் அரிக்கொம்பன் யானை பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கபட்டு, தமிழக- கேரளா எல்லை பகுதியில் மங்களதேவி கண்ணகி கோவில் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த அரிக்கொம்பன் யானை கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை, மணலாறு, இரவங்களாறு உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தேக்கடி வனப்பகுதிக்கு அருகாமையில் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்தபோது வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், சத்தம் போட்டும் வனப்பகுதிக்குள் அரிக்கொம்பனை விரட்டினர்.
இதை தொடர்ந்து அண்மையில் கிடைத்த ரேடியோ காலர் சிக்னல் படி தேனி மாவட்டம்
லோயர் கேம்ப் பவர் ஹவுஸ் அருகில் உள்ள வனப்பகுதியில் அரிக்கொம்பன் இருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை அரிக்கொம்பன் யானை கடந்து சென்றுள்ளதாகவும் சிக்னல் பதிவாகியுள்ளது. இதனையடுத்து யானை தேக்கங்காடு வனப்பகுதியில் இருந்து கம்பம் மெட்டு நோக்கி நகர்ந்து செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து சில நாட்களாக போக்கு காட்டிய அரிக்கொம்பன் யானையை பிடிக்கவும் முடியாமல், வன பகுதியில் விரட்டவும் முடியாமல் வனத்துறையினர் தவித்தனர். இந்நிலையில் கம்பம் நகர் பகுதிக்குள் கடந்த மே 27-ம் தேதி காலை திடீரென புகுந்த யானை, வாகனங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் உலா வந்தது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே இருசக்கர வாகனத்தில் சென்ற கம்பம் நகர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் அரிக்கொம்பன் யானை இடித்ததில் படுகாயம் அடைந்தார். அவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பால்ராஜை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு வனத்துறையின் சார்பில் அமைச்சர் மதிவேந்தன் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.
இதையடுத்து, சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அரிக்கொம்பன் யானை தாக்கியதில் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகத்தில் கம்பத்தை சேர்ந்த காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
மேலும் கம்பம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகள், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி ஆகிய பேரூராட்சிகள், கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடரும் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அத்துடன், அரிக்கொம்பன் ஊருக்குள் வருவதை தடுக்க ஐந்து மயக்க ஊசி செலுத்தும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அரிக் கொம்பன் நடமாட்டம் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்திருந்தார்.
ராயன்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி அணை பகுதியில் கடந்த சில தினங்களாக யானை முகாமிட்டு இருந்த அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டம் அகத்தியமலை யானைகள் காப்பக வனப்பகுதியான முத்துக்குளி என்ற பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட உள்ளது.
இந்நிலையில் முத்துக்குளி பகுதியில் அரிக்கொம்பனை விட எதிர்ப்பு தெரிவித்து பாபநாசம் முண்டந்துறை புலிகள் காப்பக சோதனைச் சாவடி முன்பு முண்டந்துறை வனப்பகுதிக்குள் வசிக்கும் காணி இன மக்கள் சுமார் 50 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.