மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற மனிதர்களைப் போல வாழ்வதற்கான அனைத்து
உரிமைகளும் உள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள ஆய்க்குடி பகுதியில்
அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து
கொண்டார். அவருடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், அமர்சேவா சங்கத்தின்
நிறுவனர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவின் போது, அமர்சேவா சங்க வளாகத்தை சுற்றி புதியதாக கட்டப்பட்டுள்ள
சுற்றுப்புறச்சுவர் மற்றும் அமர்சேவா சங்கத்திற்கு தேவையான மின்சாரத்தை
உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தி
மையத்தினையும், பன்னோக்கு பயன்பாட்டுக்கு தேவையான வகையில் புதியதாக
கட்டப்பட்டுள்ள அரங்கத்தையும் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற மனிதர்களைப் போல வாழ்வதற்கான அனைத்து
உரிமைகளும் உள்ளது. நமது நாட்டில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளார்கள்
என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. தோராயமாக கூறும் அளவுக்கு கூட தகவல்கள் இல்லை. ஒரு சில பேர் 5 கோடி என்றும், ஒரு சில பேர் 8 கோடி பேர் என்றும்
கூறிவருகிறார்கள்.
வெளிப்படையாக தெரியக்கூடிய சில குறைபாடுகளை தான் நாம் குறைபாடுகளாக ஒத்துக் கொள்கிறோம். இதையும் தாண்டி ஒரு குறைபாடாக ஏற்றுக்கொள்ளப்படாத விஷயங்கள் நமது சமூகத்தில் அதிகம் உள்ளன. குறிப்பாக நமது நாட்டில் பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை அங்கீகரிக்க ஒருவிதமான தயக்கங்கள் இருக்கின்றன. இந்த தயக்கத்தினால் ஒரு குழந்தைக்கு அறிவு சார்ந்த குறைபாடுகள் இருப்பின் அவைகளை சரி செய்ய முடியாமல் போகிறது. பொதுமக்களிடம் இது தொடர்பான மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.
உடல் குறைபாடு மட்டும் அல்லாமல் அறிவு திறன் சார்ந்த குறைபாடுகளையும் அதை
எவ்வாறு சரி செய்வது என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
2016 ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு சட்டம்
கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சில உரிமைகளை
கொடுத்தது. ஆனால், அந்த சட்டம் குறித்து கூட முழுமையான விழிப்புணர்வு ஒரு
சிலரிடம் கூட இதுவரை இல்லை.
மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு
பள்ளிகளிலும் அட்மிஷன் வழங்கப்பட வேண்டும். ஆனால், இது குறித்த முழுமையான
விழிப்புணர்வு இல்லாமல் சில பள்ளிகளில் அவர்களுக்கு அட்மிஷன் மறுக்கப்பட்டு
வருகிறது. இதை உறுதி செய்யக்கூடிய சில அமைப்புகளும் இது குறித்த போதிய
விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.
ஊனம் என்பது என்பது ஒரு நிலை. அது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நாம்
அனைவரும் தற்போது சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எந்த சூழலிலும் எதுவும் நடக்கலாம். ஒருவரின் தேவையை உணர்ந்து செயல்படுவது தான் ஒருவரை மனிதன் ஆக்குகிறது. அமர்சேவா சங்கம் தங்களது சேவை மூலம் தங்களது பெயரை நிலைக்க வைத்துள்ளது என்று ஆர்.என்.ரவி பேசினார்.
-மணிகண்டன்