பொங்கல் விழாவை கொண்டாட, சென்னையிலிருந்து கிராமங்களுக்கு சென்றவர்களால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கை-மாற்று அறுவை சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்களால் தொற்று அதிகரித்துள்ளதாகவும், இது மேலும், அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருப்பினும், மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும், கொரோனா பாதித்தவர்களில் 6 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு சம்பந்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் முடியாது என்று கூறாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடன் கலந்து ஆலோசித்து வருவதாக தெரிவித்து இருப்பது நல்ல மாற்றம் எனவும், நீட் மசோதா தொடர்பாக அமித்ஷா, ஒன்றிய மக்கள் நல்வாழ்வுதுறை மற்றும் கல்வித் துறை அமைச்சர்களை கலந்து பேசுவதாக கூறியது நல்ல மாற்றம் என அவர் தெரிவித்தார்.
அதேபோல, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தை போல தனது ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறியிருக்கிறார், தற்போது கலந்து ஆலோசித்து வருவதாக தெரிவித்து இருப்பது நல்ல மாற்றம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.