தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்பியதால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சகணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் வசதிக்காவும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேற்று விடுமுறை அளித்தது.
நேற்றுடன் விடுமுறை முடிந்ததையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தனது சொந்த வாகனங்களிலும் வருகின்றனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து, தனியார் ஆம்னி பஸ்கள், கார், வேன்கள் என்று பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர்களுக்கு மக்களை அழைத்து சென்ற வாகனங்கள் இன்று அதிகாலை முதல் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், மதுரவாயல் கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் விடுமுறை முடிந்து இன்று சென்னை திரும்பியுள்ளனர். இதனால், குறிப்பாக சென்னை கோயம்பெட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கசாவடியில் வாகனங்கள் வரிசைக்கட்டி அணிவகுத்து நிற்பதை காணமுடிகிறது.








